புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 27 octobre 2013

நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்

அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்கு பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டைவீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது. நெருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இந்நேரங்களில் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்காக யாரும் முன்வராவிட்டால் சில நேரங்களில் தன்னுடைய சுயநினைவு இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.
தினந்தோறும் பிரச்சனைகளை சந்திக்கின்ற நீதிமன்றங்கள், காவல்துறைகள், முதன் முதலில் இணக்கத்தை ஏற்படுத்தவே முனைகின்றன. இதனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கையை தொடர வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த செயல் மனிதர்களுக்கு பலன்தருவதால் இஸ்லாம் இணக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்திச் சொல்கிறது. சச்சரவுகள் தோன்றும் போது நாம் ஏன் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒதுங்கிக்கொள்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.
இவர்களைப் போன்று சுயநலம் கொண்டவர்களாக இறைவனை நம்பியவர்கள் இல்லாமல் பிறர் நலம் பேணும் பொதுநலம் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதனால் இந்த உலகத்தில் பயன் ஏற்படுகிறதோ இல்லையோ மறுஉலக வாழ்வில் பயன் கிடைக்குமா? என்பதையே நோக்கமாக கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதினால் இந்த உலகத்தில் நன்மை கிட்டாவிட்டாலும் மறுமை நாளில் நிச்சயம் இதற்கு கூலி உண்டு என்று கூறி இஸ்லாம் இதில் ஆர்வமூட்டுகிறது. இச்செயலை செய்வதன் மூலம் அல்லாஹ்வுடைய அருளை நம்மால் பெறமுடியும் என்று திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 49 : 9,10)
இந்த வசனம் நபித்தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழும் போது தான் அருளப்பட்டது.
நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும் என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்த போது அவன் தூர விலகிப் போ. அல்லாஹ்வின் மீது ஆணையாக உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த (அன்சாரித்) தோழர் ஒருவர் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும் என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங்குச்சியாலும் கைகளாலும் செருப்புக்களாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது இறைநம்பிக்கையாளர்களில் இருகுழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். (49 : 99) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
 நூல் : புகாரி (2691)
இரகசியம் பேசலாம்
இரகசியமாக மக்கள் பேசுகின்ற பெரும்பாலான பேச்சுக்களில் எந்த விதமான நன்மையும் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது. தேவையற்ற விஷயங்களை இரகசியமான முறையில் பேசுவதை வெறுக்கவும் செய்கிறது. ஆனால் இருவருக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இரகசியம் பேசலாம் என்று அனுமதி தருகிறது. அத்துடன் இல்லாமல் இந்தச் செயலை சுயலாபங்களுக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காக செய்தால் மகத்தான பரிசும் கிடைப்பதாக குர்ஆன் நற்செய்தி கூறி இந்த செயலில் ஆர்வமூட்டுகிறது.
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.
அல்குர்ஆன் (4 : 114)
தர்மம் என்றால் வரியவர்களுக்கு பொருளுதவி செய்வது மாத்திரம் தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு முறையிலாவது நம்மின் மூலம் பிறருக்கு நன்மை கிடைக்குமானால் அதுவும் தர்மம் தான். பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்ப்பளிப்பது மக்களுக்கு பலன் தருவதால் நபியவர்கள் இதை தர்மம் என்று கூறியுள்ளார்கள். இச்செயலை எல்லோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்களித்துள்ள மூட்டுகளுக்கு தர்மம் செய்வது கடமையாக்கி அந்தக் கடமையை இச்செயல் புரிவதன் மூலம் நிறைவேற்ற முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமாகும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி)
நூல் : புகாரி (2707)
மார்க்கத்தில் நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களுக்கு ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வணக்கங்களை விட மக்களுடைய பிரச்சனைகளை சரிசெய்வது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பு தொழுகை தர்மம் ஆகியவற்றை விட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் ஆம் அறிவியுங்கள் என்று கூறினார்கள். (அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர்செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது  அழித்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபு தர்தாஃ (ரலி)
நூல் : திர்மிதி (2433)
பொய் சொல்லலாம்
    மார்க்கம் பொய் சொல்வதை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் காரியமாக எச்சரிக்கிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடனும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
அறிவிப்பவர் : உம்மு குல்தூம் (ரலி)
நூல் : புகாரி (2692)
மன்னிப்புக் கிடைக்காது
    சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் பிரிந்து வாழும் சகோதரர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பு கிடைப்பதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த மோசமான நிலையிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கிறார்கள். இறைவனுடைய மன்னிப்பு என்ற பாக்கியத்தை கிடைக்கச் செய்ததற்காக அவருக்கும் இறைவனுடைய மன்னிப்பு கிடைக்கிறது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக்காட்டப்படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கு மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள் இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள் என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4653)
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பிரச்சனையை தீர்த்துவைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றாக இருக்கிறது.
ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக்கொள்ளுமளவிற்கு குபா வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டுக்கொண்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நம்மை அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல் : புகாரி (2693)
பனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்துவைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரலி)
  நூல் : புகாரி (1201)
நபி (ஸல்) அவர்களின் பேரனும் அலீ (ரலி) அவர்களின் மகனுமான ஹசன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் சில மாதங்கள் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் முஆவியா (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரண்டது. தன் சமுதாய மக்கள் இரு பெரும் திரளாக திரண்டிருப்பதைக் கண்ட ஹசன் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். மக்களுடைய நலனுக்காக தான் வகித்த ஜனாதிபதி பதவியைத் துறந்தார்கள். இவரின் மூலம் இந்த சமுதாயச் சீர்திருத்தம் ஏற்படும் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே உணர்த்தினார்கள். ஹசன் (ரலி) அவர்களிடம் இருந்த இந்த உயரிய பண்பு நம் எல்லோரிடமும் இருந்துவிடுமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் வேலையே இல்லை. 
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும் மற்றொரு முறை ஹஸன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்) இந்த எனது புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இருபெரும் கூட்டத்தார்களிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்று கூறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
நூல் : புகாரி (2704)
விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும்
பிரச்சனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வலுவானவராகவும் மற்றொருவர் வலுவற்றும் இருந்தால் பலம்படைத்தவரிடம் கொஞ்சம் விட்டுக்கொடுக்கும்படி வலியுறுத்தி இருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இருவரில் ஒருவர் தனக்குரியதை விட்டுக்கொடுத்தால் தான் இணக்கம் ஏற்படும். இருவரும் தனக்குரியதில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தால் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்லும். இதற்கு எந்த ஒரு தீர்வையும் காண இயலாது.  நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நிலையில் இந்த வழிமுறையை கடைபிடித்துள்ளார்கள்.
இப்னு அபீ ஹத்ரத் (ரலி) இடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலகிக்கொண்டு வெளியே வந்து கஅப் இப்னு மாலிக் ! என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன் அல்லாஹ்வின் தூதரே என்றேன். பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி)யை நோக்கி எழுவீராக பாதியை நிறைவேற்றுவீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஃபு பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (471)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும் படியும் மென்மையாக நடந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மற்றவர் அல்லாஹ்வின் மீதாணையாக நான் அவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே? என்று கேட்டார்கள். அந்த மனிதர் நான் தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்கு கிடைக்கும் என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2705)
என் தந்தை உஹது போரின் போது ஷஹீதாகக் கொல்லப்பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெருவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக்கொள்ளும் படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படியும் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி (2601)
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் மற்றொருவரை கயிற்றால் இழுத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனை கொன்றுவிட்டார் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் நீ அவரை கொன்றீரா? என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) இவர் ஒத்துக்கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன் என்று கூறினார். (கொன்றவர்) ஆம் நான் அவரைக் கொன்றேன் என்று கூறினார். நபியவர்கள் எவ்வாறு அவரை கொன்றாய்? என்று கேட்டார்கள். நானும் அவ(ருடைய சகோதரரு)ம் பேரித்தமரத்தின் இழைகளை சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்கு கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையில் இருந்த) கோடாரியால் உச்சந்தலையில் அடித்துவிட்டேன். அவர் இறந்துவிட்டார். (திட்டுமிட்டு இந்த கொலையை நான் செய்யவில்லை) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உன்னை விடுவித்துக்கொள்வதற்கு தேவையான பொருள் ஏதும் உன்னிடம் உள்ளதா? என்று கேட்டார்கள். அவர் என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்த பொருளும் எனக்கு இல்லை என்று கூறினார். நபியவர்கள் உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத்தொகையை கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா? என்று கேட்டார்கள். அவர் என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன் என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எரிந்து இவரை நீ பிடித்துக் கொள்! என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றபோது அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுவிட்ட) அவர் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைக் கொன்றுவிட்டால் நானும் அவரைப் போன்றாகிவிடுவதாக நீங்கள் கூறியது எனக்கு எட்டியது. (இவ்விஷயத்தில்) நான் உங்கள் கட்டளையை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் உனது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் நபியவர்களே! "ஆம்' அது அவ்வாறே ஆகட்டும்! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் அந்த குற்றவாளி (உன்னால் மன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க வேண்டும் எனக் கூறினார். ஆகையால் அவர் குற்றவாளியின் வழியில் குறிக்கிடாமல் விட்டுவிட்டார்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹ‎ýஜ்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (3470)
மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள்  நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பரிந்துரை செய்கிறார்கள். எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர்கள் ஒதிங்கிவிடவில்லை. இவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் போது சிலர் அதை ஏற்றுக்கொண்டார்கள். சிலர் மறுத்துவிட்டார்கள். இது போன்ற இடங்களில் பலம் பொருந்தியவர்கள் சற்று விட்டுக்கொடுத்தால் தான் சுமூகமான நிலை ஏற்படும். நம்மிடத்தில் கஞ்சத்தனம் மேலோங்கியிருந்தால் இந்த மோசமானத் தன்மை நம்மை இணக்கமாக விடாது. இணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் கஞ்சத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும். எனவே தான் அல்லாஹ் சமாதானம் சிறந்தது என்று சொல்லிவிட்டு கஞ்சத்தனம் கொள்ளக் கூடாது என்றும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்றும் பின்வரும் வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 128)
        கணவன் மனைவி பிரச்சனை
கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகமாக பிரச்சனைகள் ஏற்படுவதால் இங்கும் சமாதானப்படுத்துதல் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்கு பல குடும்பங்களில் பிரச்சனைகள் விஷ்வரூபம் எடுப்பதற்கு காரணமாக மூன்றாவது ஆள் இருக்கிறார். இவர்கள் தம்பதியினருக்கிடையே பிரச்சனைகளை எழுப்பாமல் இருந்தாலே சமாதானப்படுத்துவதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டால் மூன்றாவது நபர் வந்து தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூன்றாவது ஆள் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் இணக்கமாகிக் கொண்டால் அவர்களும் நல்லிணக்கத்தை உருவாக்கிய நல்லவர்களின் பட்டியலில் வந்துவிடுவார்கள். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 35)
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 128)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் நபியவர்கள் அதில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்.
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சொல்லப்படும். அவர் (பரீரா தன்னை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5283)
வலீத் பின் உக்பாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! வலீத் என்னை அடிக்கிறார் என்று முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நபி எனக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்கள் என்று நீ அவரிடம் கூறு! என்று சொன்னார்கள். (இதன் பிறகு) சிறிது காலம் கூட கழியவில்லை மறுபடியும் திரும்பி வந்து அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்த வில்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையின் ஒரு பகுதியை அப்பெண்ணிடம் கொடுத்து மீண்டும் அவரிடம் நபியவர்கள் எனக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்று கூறு என்றார்கள். சிறிது காலம் கூட கழியவில்லை அதற்குள் அப்பெண்மணி மறுபடியும் வந்து அவர் எனக்கு அடியைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தனது இரு கைகளையும் உயர்த்தி இறைவா! வலீதை நீ பார்த்துக் கொள்! அவர் எனக்கு (அளித்த வாக்குறுதியை) நிறைவேற்றவில்லை என்று இரண்டு முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : அஹ்மத் (1236)
மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படுகிறது. இதை தீர்த்து வைப்பதற்காக நபியவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களது பரிந்துரையை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்க மறுத்துவிடுகிறார்கள். தன்னுடைய மரியாதையை நபியவர்கள் பெரிது படுத்தாமல் இது போன்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்தாலும் பிரச்சனைகள் வெடிக்கும் போது அங்கே நல்லிணக்கத்தை அவர்கள் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை.
                                                                                                                  அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்ஸி

dimanche 13 octobre 2013

அரஃபா நோன்பு எப்போது நோர்க்க வேண்டும்?

சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.

சுபுஹ் தொழுத பின் முஜ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.

இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.

சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்?

எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.

அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.

அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.

மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.

தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?

ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?

உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.

அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது.
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். (நான் நோன்பு வைக்கவில்லை என்பதை அறிந்த ஆயிஷா (ரலி) அவர்கள்) இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே'' என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: பைஹகீ
மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது.

மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.

ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் தேதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் தேதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள்.

ஆனால் ஜனவரி முதல் தேதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள்.

இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.

நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் - அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?

இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.
தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.

நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.

சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.

இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்.

நாமே தீர்மானிக்கலாமா?

பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ
நாமே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே ஒப்படைத்துள்ளதால் நமது விருப்பம் போல் தீர்மானிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் எவற்றையெல்லாம் தீர்மானித்து விட்டார்களோ அந்த விஷயத்தில் நாம் தீர்மானிக்க ஒன்றுமே இல்லை. அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்மானிக்காமல் நம்மிடம் அப்பொறுப்பை விட்டுள்ள விஷயத்தை மட்டுமே நாம் தீர்மானிக்க வேண்டும்.

சவூதியில் காணப்படும் பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று நாம் தீர்மானித்தால் அந்தத் தீர்மானம் குப்பைக் கூடைக்குத் தான் போக வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் அனைவருக்கும் தலைப்பிறை ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

28 நோன்பு முடிந்தவுடன் தலைப்பிறை என்று தீர்மானிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. அது போல் முப்பது முடிந்த பிறகும் அந்த மாதம் நீடிக்கிறது என்று தீர்மானிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்பது தெளிவான ஹதீஸ் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

கண்ணால் பிறையைக் கண்ட பிறகு அல்லது காண்பதற்கு ஏற்ற நாளில் கண்டவர் சாட்சி கூறிய பிறகு அதை நம் வசதிப்படி மறுக்க முடியாது. தக்க சாட்சிகள் கூறும் போதும் நாமே கண்ணால் காணும் போதும் ஏற்க வேண்டும் என்று மார்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை மீறி நாம் தீர்மானிக்க முடியாது.

இது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை தவிர நாம் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்ட அம்சமும் இருக்கிறது.

இதை நாமே ஏற்றுக் கொண்டிருக்கிற மற்றொரு சட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்தால் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழலாம் என்று மார்க்கம் அனுமதித்துள்ளது.

காயல்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு ஒருவர் தூத்துக்குடி வருகிறார். இவர் கஸ்ர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கிறார். இவர் கஸ்ர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகிறார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.

ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.

இது போன்ற தீர்மானம் செய்வது மட்டுமே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எந்தக் கிராமத்தில் தெரியும் பிறை நமது ஊருக்குத் தெரிய வாய்ப்புள்ளது? எந்தக் கிராமங்களில் காணப்பட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தும்? எவ்வளவு தூரத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்? என்பன போன்ற விபரங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கலாம். இந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மட்டும் தான் மிச்சமாக உள்ளது.

மற்ற அனைத்தும் நபியவர்களால் முடிவு செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு தீர்மானிக்கும் போது நமது ஆய்வை முழுமையாகச் செய்ய வேண்டும். இறையச்சத்தை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

தவறான நோக்கத்தில் தவறான முடிவு செய்தால் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

கசாப்புக் கடையில் இறைச்சி கிடைக்குமா? தையல் கடையில் துணிகள் தைக்கப்பட்டு விட்டனவா? என்பதையெல்லாம் அளவு கோலாகக் கொண்டு தீர்மானிப்பது மார்க்கம் அனுமதிக்கின்ற தீர்மானமாகாது.

பிறை சம்பந்தமான ஒட்டுமொத்த முடிவும் நமது கையில் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

நீங்கள் தீர்மானிக்கும் நாள் என்பது ஒட்டு மொத்த உலக சமுதாயமும் சேர்ந்து தீர்மானிப்பது என்று விசித்திரமான விளக்கமும் தரப்படுகிறது.

பிறை சம்பந்தமாக ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்க முடியாது என்பது முன்னரே நிரூபிக்கப்பட்டு விட்டது.

உலகத்திற்கெல்லாம் ஒரே தலைமை ஏற்பட்டால் கூட ஒரே நாளில் நோன்பு என்று தீர்மானிக்க முடியாது. அப்படித் தீர்மானிப்பதில் சில பகுதிகளில் 28 நோன்பில் முடியும் என்பதையும் முன்னரே விளக்கியுள்ளோம்.

எனவே ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் காணப்பட்ட பிறை குறித்து தீர்மானிப்பதையே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பது தான் சரியான விளக்கமாகும்.

நூலின் பெயர் :பிறை ஓர் விளக்கம்
ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன்

தூதர் வழியில் தூய ஹஜ்

ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். காரணம், ஷாபி மத்ஹபில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்பதால் தான். ஷாபி மத்ஹபில் மனைவியைத் திரையின்றி தொட்டு விட்டால் உளூ முறிந்து விடும். மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், பிரம்மாண்டமான அரவை எந்திரத்தில் உருள்கின்ற மாவுத் துளிகளாக வலம் வருவார்கள். இந்தக் கூட்டத்தில் அருகில் வரும் மனைவியைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்று உதறி விட்டால் அவ்வளவு தான். மனைவியைத் தேடி அலைய வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் அடுத்தடுத்துத் தொடர வேண்டிய வணக்கங்கள் தடைப்பட்டு, தடங்கலாகி விடும். இந்த இக்கட்டை விட்டுத் தப்பிப்பதற்காகவே ஷாபி மத்ஹபிலிருந்து ஹனபி மத்ஹபுக்கு மதம் மாற்றும் படலத்தை அவலத்தை இந்த ஆலிம்கள் அரங்கேற்றுகின்றனர்.

மத்ஹபு அடிப்படையில் நடத்தப்படும் ஹஜ் வகுப்புகளில் நடைபெறும் கூத்துக்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். "உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 2286

ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பாக்கியத்தையும் பலனையும் பெறுவதற்குப் பதிலாக மத்ஹபு என்ற பெயரில் செயல்பட்டுத் தங்கள் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி, வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்கள், அவரவர்கள் மனதிற்குத் தக்கபடி அடித்து விடுகின்ற, அளந்து விடுகின்ற தீர்ப்புகளைக் கேட்டு, அதன்படி செயல்பட்டு வாழ்நாளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வணக்கத்தைப் பாழடித்துப் பயனற்றதாக்கி விடுகின்றனர்.

இந்த அறியைôமையைப் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் தத்தமது பகுதிகளில், "நபிவழியில் நம் ஹஜ்' என்ற பெயரில் ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, ஹஜ் செய்முறையை விளக்கி வருகின்றனர். இதில் சுன்னத் வல்ஜமாஅத்தில் உள்ளவர்களும் பலர் பங்கெடுத்துப் பயனடைகின்றனர். நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை இஸ்லாமிய சமுதாயத்திற்கு அறிமுகம் செய்து, அமுல்படுத்தும் விதமாக ஏகத்துவம் மாத இதழ், நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளது. இதில் மற்றொரு மைல் கல்லாக, தூதர் வழியில் தூய ஹஜ் என்ற தலைப்பில், ஹஜ்ஜின் நிரல்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளை இந்த இதழில் வழங்கியிருக்கின்றோம். இதைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு ஹாஜிகளையும், மற்றவர்கள் இதை ஹாஜிகளுக்குப் பரிசளித்துப் பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


ஹஜ் நினைவுக் குறிப்பேடு அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவம் மாத இதழ், ஹஜ் தொடர்பாக மக்களுக்குப் பயன்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை, பல்வேறு தலைப்புகளில் ஹஜ் மாதங்களையொட்டி அளித்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஹஜ் நேர்முக வர்ணனை, பெண்கள் ஹஜ் செய்யும் முறை, ஹஜ் விளக்கக் கையேடு ஆகியவை அதில் முக்கியமானவையாகும். "உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2286

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, இந்த மாத இதழில் ஹஜ் வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போன்று வரிசைப்படுத்தி, எண் குறிப்பிட்டுத் தந்துள்ளோம். ஹஜ் செய்பவர் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நிரல்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கின்ற வகையில் இந்த நினைவுக் குறிப்பேட்டை ஏகத்துவம் இதழ் தருகின்றது. இந்நிரல்களில் இடம்பெறுகின்ற வணக்கங்களில் குறிப்பிட்ட சில வணக்கங்களை விட்டு விட்டால் ஹஜ் நிறைவேறாது. அந்த வணக்கங்களை அந்தந்த இடங்களில் அடையாளப்படுத்தியிருக்கிறோம். 

இந்த ஹஜ் நினைவுக் குறிப்பேடு அல்பானி அவர்கள் எழுதிய "ஹஜ், உம்ரா வணக்கங்கள்' என்ற அரபு நூலைத் தழுவலாகக் கொண்டது என்பதையும் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறோம். அல்பானி அவர்களுக்கும் நமக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. எனவே, இந்த நூலில் ஹதீஸ் அடிப்படையில் எது சரி என்று நாம் கண்டோமோ அவற்றை மட்டுமே இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். உடன்பாடில்லாத விஷயங்களை விட்டு விடுகின்றோம். பொதுவாக மத்ஹபு சட்ட நூல்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் சட்டங்களைச் சொல்கின்ற போது கட்டளைகளையும் தடைகளையும் மட்டும் சொல்வார்கள். அதற்கான ஆதாரங்களைச் சொல்ல மாட்டார்கள். உதாரணமாக, தொழுகையில் தக்பீர் கட்ட வேண்டும்; வஜ்ஜஹ்த்து ஓத வேண்டும்; தொழுகையில் பேசக் கூடாது என்று சொல்வார்கள். ஹஜ்ஜின் போது தவாஃப் செய்ய வேண்டும்; தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று சட்டங்களையும் தடைகளையும் சொல்வார்கள். இதற்கான ஆதாரங்கள் அந்த மத்ஹபு நூற்களில் இருக்காது. தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் மத்தியில் ஒரு சட்டத்தைச் சொல்லும் போதும் சம்பவங்களை, சரித்திரங்களைச் சொல்லும் போதும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சேர்த்துச் சொல்கின்ற முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நினைவுக் குறிப்பேட்டைப் பொறுத்த வரை, ஆதாரங்களுடன் சேர்த்துக் குறிப்பிட்டால் அது ஹஜ் வணக்கங்களின் வரிசையைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆதாரங்களைத் தனியாகக் குறிப்பிட்டுள்ளோம். அதாவது சட்டங்களை வரிசையாகக் குறிப்பிட்டு விட்டு, ஆதாரங்களை அடிக்குறிப்பாக வெளியிட்டுள்ளோம்.


இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் செய்யச் செல்வோர் தமத்துஃ என்ற முறையிலேயே செய்கின்றனர். அதன்படி முதலில் உம்ரா செய்து, இஹ்ராமைக் களைந்து விட வேண்டும். பின்னர் மீண்டும் ஹஜ்ஜுக்காகத் தனியாக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தான் தமத்துஃ எனப்படுகின்றது. தமத்துஃ முறையில் உம்ராவின் வணக்க நிரல்களை வரிசையாகப் பார்ப்போம். இந்த நிரல்களைப் படிக்கும் போது தமத்துஃ ஹஜ் என்றால் என்னவென்பது விளங்கி விடும். 

உம்ரா - நிகழ்ச்சி நிரல் இஹ்ராம்

1. மாதவிலக்கு, பிரசவ இரத்தப் போக்கு உள்ள பெண்கள் உட்பட (ஹஜ் மற்றும்) உம்ரா செய்வோர் அனைவரும் இஹ்ராமுக்கு முன் குளிக்க வேண்டும். 
2. ஆண்கள் அணிய வேண்டியவை: தையல் இல்லாத வேஷ்டி, மேல் துண்டு, காலில் செருப்பு 
3. ஆண்கள் அணியக் கூடாதவை: அ) தொப்பி ஆ) தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள் இ) சட்டை ஈ) கால் சட்டை எ) வர்ஸ் எனும் சாயம் தோய்க்கப்பட்ட மஞ்சள் ஆடை ஏ) குங்குமம் சாயமிடப்பட்ட ஆடை. 
4. பெண்கள் அணியக் கூடாதவை: அ) முகத்தை மறைப்பது கூடாது. ஆ) கைகளுக்கு உறை அணியக் கூடாது.
 5. இஹ்ராமுக்குரிய எல்லைக்கு வரும் முன்னரே வீட்டில் வைத்து இஹ்ராம் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். கார் அல்லது விமானம் போன்ற வாகனம் இஹ்ராம் எல்லையை அடைகின்ற போது ஆடைகளை உடனே அணிய இயலாது. ஏற்கனவே இஹ்ராம் ஆடையை அணிந்திருந்தால் எல்லையை அடைந்ததும் "லப்பைக்க உம்ரத்தன்' (உம்ரா செய்கிறேன்) என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்து விடலாம். 6. இஹ்ராமின் போது தடுக்கப்பட்டவை: அ) திருமணம் முடிக்கவோ, பெண் பேசவோ கூடாது. ஆ) மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. வீண் விவாதங்களிலோ,  குற்றச் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. இ) வேட்டையாடக்கூடாது. ஈ) மயிர்களை நீக்கக்கூடாது. உ) நறுமணம் பூசக்கூடாது.
7. இஹ்ராம் கட்டும் போது போது நறுமணம் பூசியிருந்தால் அந்த நறுமணம் தொடர்வதில் தவறில்லை. எல்லைகள்
8. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடியவர்களுக்குரிய எல்லைகளை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். இதன்படி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கு ஸஃதிய்யா என்றழைக்கப்படும் யலம்லம் ஆகும்.
9. உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட விரும்பும் போது, "லப்பைக்க உம்ரத்தன்' என்று வாயால் சொல்லிக் கொள்ள வேண்டும்.
10. அச்சத்தினால் அல்லது ஏதேனும் நோயினால் ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு, "இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்' என்று சொல்லி இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அவர் பலிப்பிராணி கொடுக்காமல் தனது உம்ரா அல்லது ஹஜ்ஜிலிருந்து உடனே விடுபட்டுக் கொள்ளலாம். வரும் ஆண்டு அவர் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் செய்கின்ற ஹஜ் முதன்முதலில் செய்கின்ற ஹஜ்ஜாக இருந்தால் அந்த ஹஜ்ஜை வரும் ஆண்டு நிறைவேற்றியாக வேண்டும்.
11. இஹ்ராமுக்காகத் தனித் தொழுகை ஏதுமில்லை. கடமையான தொழுகை நேரத்திற்கு ஏற்ப அவரது இஹ்ராம் அமைந்து விட்டால் தொழுது விட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.
12. மதீனாவிலிருந்து வருபவர்களுக்கு துல்ஹுலைபா எல்லையாகும். அங்கு வருபவர்கள் மட்டும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ள வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். தல்பியா
13. இஹ்ராம் கட்டும் போது கிப்லாவை நோக்கி நின்று கொண்டு தல்பியா சொல்ல வேண்டும்.
14. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தல்பியா இது தான். லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக
15. தல்பியாவை உரத்துச் சொல்ல வேண்டும்.
16. தல்பியாவை பெண்களும் சப்தமிட்டுச் சொல்லலாம். காரணம் தல்பியாவைப் பற்றிச் சொல்கின்ற ஹதீஸில் ஆண், பெண் என்று பிரிக்காமல் பொதுவாகவே அமைந்திருக்கின்றது.
17. மக்காவிற்கு வந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்காவில் குளிப்பது
18. மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ள வேண்டும்.
19. மக்காவில் நுழையும் போது வசதிப்பட்டால் பகலில் நுழைய வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு முன்மாதிரி இருக்கின்றது.
20. மக்காவில் நுழையும் போது முஅல்லாத் என்று அழைக்கப்படும் மேற்புறம் வழியாக உள்ளே நுழைய வேண்டும்.
21. கஅபாவில் நுழையும் போது மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும். மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான, அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும். தவாஃபுல் குதூம்
 22. புனிதப் பள்ளிக்குள் நுழைந்ததும் ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட்டு, அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும்.
 23. ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட முடியவில்லை எனில் தொடுவது போல் சைகை செய்து கொள்ள வேண்டும்.
24. கஅபாவை தனது இடது புறமாக அமையச் செய்து, ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டுத் துவங்கி, ஹஜ்ருல் அஸ்வத் முடிய ஒரு சுற்று என்ற வீதம் 7 சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
25. தவாஃபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும்.
26. ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதிற்கு வந்ததும் தக்பீர் சொல்ல வேண்டும்.
27. ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதில் ஏராளமான சிறப்புக்கள் உள்ளன.
28. தவாஃப் செய்யும் போது வலது புஜத்தைத் திறந்து இடது புஜத்தை மூடிக் கொள்ள வேண்டும். ஆடையின் இரு விளிம்புகளையும் இடது கையின் தோள் புஜத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
29. ஏழு சுற்றுக்களில் முதல் 3 சுற்றுக்களை சற்று வேகமாகச் சுற்ற வேண்டும். மீதிச் சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும்.
30. கஅபாவின் மூன்றாவது மூலையில் அமைந்திருக்கின்ற ருக்னுல் யமானிக்கு வரும் போது அதைக் கையால் தொட்டு முத்தமிட வேண்டும். கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்யத் தேவையில்லை. 
31. ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையே வரும் போது, "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்ற வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும். 
32. கஅபாவின் மற்ற இரு மூலைகளையும் முத்தமிடக் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இது தொடர்பாக எந்தவொரு ஹதீசும் வரவில்லை.
33. தவாஃப் செய்வதற்கென்று எந்தவொரு தனிப்பட்ட திக்ரும் கிடையாது.
34. தவாஃபின் போது பேசுவது தவறில்லை. 35. மாதவிலக்கான பெண்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதியில்லை.
36. ஏழாவது சுற்றை முடித்தவுடன் தன்னுடைய வலது புறத்தை மூடிக் கொண்டு மகாமு இப்ராஹீமுக்குச் சென்று, "வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா'' என்று ஓத வேண்டும்.
37. மகாமு இப்ராஹீமை தனக்கும் கஅபாவுக்கும் இடையில் இருக்குமாறு அமைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
38. அந்த இரு ரக்அத்துக்களில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயங்களை ஓத வேண்டும். 39. தொழுது முடித்ததும் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகிக் கொள்ள வேண்டும். 40. ஜம்ஜம் நீரைத் தனது தலையிலும் சிறிது ஊற்றிக் கொள்ள வேண்டும்.
41. பிறகு மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு வந்து அதை முத்தமிட வேண்டும். ஸஃபா, மர்வாவில் ஸயீ செய்தல்
42. பிறகு ஸஃபா, மர்வாவிற்கு வர வேண்டும். அங்கு வந்து, "இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்' என்ற வசனத்தை ஓத வேண்டும். "அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்' என்று கூற வேண்டும்.
 43. ஸஃபாவிலிருந்து துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்க்க வேண்டும்.
44. கஅபாவை நோக்கி லாயிலாஹ இல்லல்லாஹ்  என்று கூறவேண்டும். அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும். 45. லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை மூன்று தடவை கூற வேண்டும்.
 46. இந்த திக்ருகளுக்கிடையே துஆவும் செய்து கொள்ள வேண்டும்.
47. இதன் பின் ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்காக இறங்க வேண்டும்.
48. ஸஃபாவிலும் மர்வாவிலும் பச்சை நிற விளக்கு அடையாளமிடப்பட்ட இடத்தை சற்று வேகமாகக் கடக்க வேண்டும்.
49. மர்வாவிற்கு வந்து அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்ற திக்ருகள், துஆக்களை இங்கும் அப்படியே செய்ய வேண்டும்.
50. பிறகு ஸஃபாவை நோக்கித் திரும்ப வர வேண்டும். இது இரண்டாவது சுற்றாகும்.
51. பின்னர் மீண்டும் மர்வாவுக்குச் செல்ல வேண்டும். இப்படியே கடைசிச் சுற்று மர்வாவில் முடிகின்ற விதமாக ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
52. ஏழாவது சுற்று முடிவடைந்ததும் தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் உம்ரா நிறைவடைகின்றது. 
இதன் பிறகு துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்ட வேண்டும். அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்தும் இருவருக்கும் அனுமதிக்கப்படுகின்றது. இந்த அனுமதி துல்ஹஜ் பிறை 8ல் இஹ்ராம் கட்டுகின்ற வரை நீடிக்கும். ஹஜ் தமத்துஃ மேற்கண்டவாறு உம்ராவை முடித்து விட்டு, இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்ற வரை அனுபவிக்கும் முறைக்குப் பெயர் தான் ஹஜ் தமத்துஃ (சுகம் அனுபவிக்கும் ஹஜ்) ஆகும். 

ஹஜ் கிரான் 

ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் அப்படியே அதே இஹ்ராமிலேயே ஹஜ் முடிகின்ற வரை தொடர்ந்து நீடிப்பதற்கு ஹஜ் கிரான் என்று பெயர். கிரான் என்றால் சேர்த்தல் என்று பொருள். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதால் இந்தப் பெயர் வழங்கப்படுகின்றது. கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்யும் போது ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் ஹஜ்ஜின் போது ஸயீ செய்யத் தேவையில்லை. அல்லது உம்ராவின் போது ஸயீ செய்யாமல் ஹஜ்ஜின் போது மட்டும் செய்து கொள்ளலாம். 
தமத்துஃ, கிரான் ஆகிய முறைகளில் எந்த முறையில் ஹஜ் செய்தாலும் அவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் மக்காவில் 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பிய பின் 7 நோன்புகளும் நோற்க வேண்டும். ஹஜ் இஃப்ராத் ஹஜ்ஜை மட்டும் தனித்துச் செய்வதற்குப் பெயர் இஃப்ராத் ஆகும். இவ்வகை ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்ய மாட்டார்கள். அதனால் அவர் குர்பானி கொடுக்கவும் தேவையில்லை. இஃப்ராதுக்கும் கிரானுக்கும் உள்ள வித்தியாசம் நிய்யத் மற்றும் குர்பானி ஆகியவற்றைத் தவிர வேறு வித்தியாசமில்லை. 
உம்ரா ஆதாரங்கள் 1. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா' எனும் இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர் களை) அனுப்பி "நான் எப்படி (இஹ்ராம்) கட்ட வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, இஹ்ராம் கட்டிக்கொள்'' என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம் 2137) 2. 

"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள். (புகாரி 134) 3.

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1265) 
"யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்'' (நூல்: புகாரி 1841) 

4. "இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1838) 
6.அ) "இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2522) 
6. ஆ) ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2:197) 
6. இ) உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 5:96)
6. ஈ) ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!'' என்றார்கள். (நூல்: புகாரி 1814) 
6. உ) புகாரி 1265வது ஹதீஸில் "அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் அறியலாம்.
 7. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன். (நூல்: புகாரி 5928) 
8. மதீனாவாசிகளுக்கு "துல்ஹுலைஃபா' என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு "ஜுஹ்ஃபா' என்ற இடத்தையும், "நஜ்து' வாசிகளுக்கு "கர்னுல் மனாஸில்' என்ற இடத்தையும், "யமன்'வாசிகளுக்கு "யலம்லம்' (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். "இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்'' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1524) 
9. நபி (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்: முஸ்லிம் 2194, 2195) 10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, "நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!'' என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்' கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாத வாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்'' என்று சொல்லிவிடு!'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5089) 11. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் (லுஹர்) தொழுதுவிட்டு, (இஹ்ராம் அணிந்து) "கஸ்வா' எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ' எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
12. எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து "இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!'' எனக் கட்டளையிட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1534) 
13. இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் - புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள். (நூற்கள்: புகாரி 1553, பைஹகீ சுனனுல் குப்ரா 9258) 
14. "லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக''  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1549, 5915) 
15. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்'' என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாகிம், பைஹகீ 9275, திர்மிதி 759) 
17-19. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் - புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்' என்றும் கூறுவார்கள். (நூல்: புகாரி 1573) துல்ஹஜ் நான்காம் நாள் காலை நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2131) 
20. நபி (ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள். (நூல்: புகாரி 1576) 
21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது "அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக' (இறைவா! உன்னிடம் நான் உன் அருள்களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும். (நூல்: முஸ்லிம் 1165) 
22. இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1606) 
23. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். (நூல்: புகாரி 1612) 
24. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் "ஹஜருல் அஸ்வது'க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள். (நூல்: முஸ்லிம் 2139) 
25, 26. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு "அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1613) 
27. மறுமை நாளில் அல்லாஹ் கல்லை எழுப்புவான். அதற்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கும். பேசுகின்ற நாவு இருக்கும். உண்மையுடன் அதை முத்தமிட்டவருக்கு அது சாட்சி கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ 884) 
28. தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607) 
29. நபி (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1644, 1617) 
30 & 32. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 166, 1609) 
31. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616) 
34. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். "இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக'' என்றும் கூறினார்கள். (புகாரி 1620, 6703) 
35. "நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 305, 1650) 
36, 37, 38. மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, "இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்'' (2:125) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
39, 40. நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707) 
41-49. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்' அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா' மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்'' எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்'' என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா' மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள். மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)'' என்றும் கூறினார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள். பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
52. "ஸஃபா-மர்வாவுக்கிடையே "ஸயீ' செய்து விட்டு, தலை முடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1691)

ஹஜ் - நிகழ்ச்சி நிரல் துல்ஹஜ் எட்டாம் நாள் இஹ்ராம்

1. துல்ஹஜ் பிறை எட்டாம் நாள், "லப்பைக் ஹஜ்ஜன்' என்று கூறி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூற வேண்டும். குளித்தல், நறுமணம் பூசுதல், தையல் இல்லாத மேலாடை, கீழாடை அணிதல் போன்ற உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது செய்த அனைத்துக் காரியங்களையும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது பேணிக் கொள்ள வேண்டும். 2. தங்கியிருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டி, தல்பியா கூற வேண்டும். 3. பத்தாம் நாளன்று ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்ற வரை தல்பியாவை நிறுத்தாமல் சொல்ல வேண்டும். 4. பிறகு மினாவுக்குச் சென்று அங்கு மறுநாள் காலை (பிறை 9) வரை தங்க வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, சுப்ஹ் ஆகிய தொழுகைகளை அந்தந்த நேரங்களில் தொழ வேண்டும். லுஹர், அஸர், இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகச் சுருக்கித் தொழ வேண்டும். ஒன்பதாம் நாள் அரஃபாவுக்குச் செல்லுதல் 5. சூரியன் உதயமானதும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்ல வேண்டும். 6. அவ்வாறு செல்லும் போது தல்பியாவும் சொல்லலாம். தக்பீரும் சொல்லலாம். 7. நமிராவில் தங்க வேண்டும். நமிரா என்பது அரஃபாவுக்கு அருகில் உள்ள இடம். இது அரஃபாவைச் சார்ந்தது அல்ல. இங்கு உச்சி சாயும் வரை இருக்க வேண்டும். 8. சூரியன் உச்சி சாய்ந்ததும் பத்னுல்வாதி (அல்லது உர்னா) எனுமிடத்திற்கு வர வேண்டும். இது அரஃபாவுக்குச் சற்று முன்பாக அமைந்திருக்கின்றது. அங்கு அந்த இடத்திற்கு ஏற்றவாறு இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். (குறிப்பு: நமிரா, பத்னுல்வாதி அல்லது உர்னாவில் தங்க வாய்ப்பு இல்லையெனில் நேராக அரஃபாவுக்குச் சென்று விடலாம் என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.) 9. அரஃபாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்தும், நான்கு ரக்அத்துக்களை இரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கியும் தொழ வேண்டும். 10. இவ்விரு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு, இரண்டு இகாமத் சொல்ல வேண்டும். 11. லுஹருக்கும் அஸருக்கும் இடையில் நபி (ஸல்) அவர்கள் வேறெதையும் தொழவில்லை. 12. அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கிக் கொள்ளலாம். 13. அரஃபா இல்லையேல் ஹஜ் இல்லை. ஜபலுர்ரஹ்மாவில் துஆச் செய்தல் 14. ஜபலுர்ரஹ்மத் மலை அடிவாரத்தில் வந்து நிற்க வேண்டும். இல்லையேல் அரஃபாவில் எங்கும் நின்று கொள்ளலாம். 15. அங்கு கிப்லாவை முன்னோக்கி, தனது கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். தல்பியாவும் சொல்ல வேண்டும். 16. நகரத்திலிருந்து விடுதலையை ஆதரவு வைத்து, நாம் நாடியதை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்துக் கொண்டும் தல்பியா சொல்லிக் கொண்டும் சூரியன் மறைகின்ற வரை இருக்க வேண்டும். 17. அரஃபா நாளில் ஹாஜிகளுக்கு நோன்பு இல்லை. முஸ்தலிபாவுக்குச் செல்லுதல் 18. சூரியன் மறைந்ததும் அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும். 19. முஸ்தலிபாவுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி முதலில் மக்ரிப் தொழுகையையும், பின்னர் இகாமத் மட்டும் சொல்லி இஷாவை இரண்டு ரக்அத்களாச் சுருக்கித் தொழ வேண்டும். 20. இவ்விரு தொழுகைகளுக்கு இடையேயும், இஷாவிற்குப் பிறகும் எந்தத் தொழுகையும் தொழ வேண்டாம். 21. பிறகு சுப்ஹ் வரை தூங்க வேண்டும். 22. ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி ஃபஜ்ர் தொழ வேண்டும். 23. பலவீனமானவர்கள், பெண்களைத் தவிர உள்ள ஹாஜிகள் அனைவரும் முஸ்தலிபாவிலேயே ஃபஜ்ர் தொழ வேண்டும். பெண்கள் மற்றும் பலவீனமானவர்கள் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நடு இரவுக்குப் பின் செல்லலாம். பத்தாம் நாள் மஷ்அருல் ஹராமில் துஆச் செய்தல் 24. பிறகு மஷ்அருல் ஹராமுக்குச் சென்று கிப்லாவை முன்னோக்கியவாறு, அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறி, லாயிலாஹ இல்லல்லாஹ் போன்ற திக்ருகளைச் செய்ய வேண்டும். பிரார்த்தனையும் செய்ய வேண்டும். 25. வானம் வெளுக்கின்ற வரை (அதே சமயம் சூரியன் உதிப்பதற்கு முன்பு) மஷ்அருல் ஹராமில் துஆச் செய்ய வேண்டும். 26. முஸ்தலிபாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். மீண்டும் மினாவுக்குச் செல்லுதல் 27. பிறகு பிறை 10 அன்று காலை சூரியன் உதிப்பதற்கு முன்னால் மினாவுக்குத் திரும்ப வேண்டும். 28. பத்னுல் முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். 29. ஜம்ரத்துல் அகபாவுக்கு மையப் பாதையில் செல்ல வேண்டும். கல்லெறிதல் 30. கல்லெறிவதற்காக முஹஸ்ஸரில் அதாவது மினாவில் கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். 31. ஜம்ரத்துல் அகபா என்பது (முஸ்தலிபாவிலிருந்து திரும்பும் போது) கடைசியில் அமைந்திருக்கும் அகபாவாகும். மக்காவிற்கு மிக அருகில் அமைந்ததாகும். 32. மினா நமது வலது புறத்திலும், மக்கா நமது இடது புறத்திலும் அமைந்திருக்கும் நிலையில் ஜம்ரத்துல் அகபாவை முன்னோக்கி நிற்க வேண்டும். 33. சுண்டி விளையாடக்கூடிய அளவிலுள்ள ஏழு சிறிய கற்களை ஜம்ராவில் எறிய வேண்டும். 34. ஒவ்வொரு கல்லை எறியும் போதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும். 35. அதுவரை கூறி வந்த தல்பியாவை கல்லெறிதல் முடிந்தவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். 36. சூரியன் உதித்த பிறகு தான் கல்லெறிய வேண்டும். 37. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே பலவீனர்கள் மினாவுக்கு வந்திருந்தாலும் அவர்களும் சூரியன் உதித்த பிறகே கல்லெறிய வேண்டும். 38. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டு வந்த பெண்களுக்கு, சூரியன் உதிக்கும் முன் கல்லெறிவதற்கு அனுமதி உள்ளது. 39. சூரியன் உதித்ததிலிருந்து, உச்சி சாய்வதற்கு முன்பு வரை கல்லெறிந்து கொள்ளலாம். 40. சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பு கல்லெறிய முடியவில்லையெனில் சூரியன் உச்சி சாய்ந்த பின் அல்லது இரவு வரை கல்லெறிந்து கொள்ளலாம். 41. கல்லெறிந்து முடிந்ததும் மினாவில் அறுக்குமிடத்திற்கு வந்து தமது குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும். 42. மினாவில் மற்ற இடங்களிலும் அறுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், மினா அனைத்துமே அறுக்குமிடம் தான் என்று கூறியுள்ளார்கள். 43. குர்பானியை தானே அறுப்பது நபிவழியாகும். அடுத்தவரையும் நியமித்து அறுக்கலாம். 44. குர்பானி இறைச்சியை சாப்பிடலாம்; சேமிக்கலாம். 45. ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம். 46. தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர் அங்கு இருக்கும் போது மூன்று நோன்புகள், ஊருக்குத் திரும்பியதும் ஏழு நோன்புகள் ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும். 47. அய்யாமுத் தஷ்ரீக் என அழைக்கப்படும் 11, 12, 13 ஆகிய நாட்களில் அந்த மூன்று நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். தலை முடியை மழித்தல் 48. குர்பானி முடிந்ததும் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். மொட்டையடிப்பதே சிறந்தது. 49. மழித்துக் கொள்பவர் தனது வலது புறத்திலிருந்து மழிக்க அல்லது முடியை குறைக்கத் துவங்க வேண்டும். 50. தலையை மழிப்பது ஆண்களுக்கு மட்டும் தான் பெண்கள் தலைமுடியை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். 51. இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது குறைத்ததும் அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களில் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றன. இதன்படி ஹாஜி தையல் சட்டை அணிந்து கொள்ளலாம்; நறுமணம் பூசிக் கொள்ளலாம். (இது முதல் விடுதலை எனப்படுகின்றது.) 52. பலியிடுகின்ற நாளான பத்தாம் நாள், மினாவில் லுஹர் நேரத்தில் ஜம்ராக்களுக்கு இடையில், மக்களுக்கு ஹஜ்ஜின் சட்டதிட்டங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் இமாம் சொற்பொழிவாற்றுவது நபிவழியாகும். தவாஃபுல் இஃபாளா 53. பத்தாம் நாளன்று புனித ஆலயத்திற்குச் சென்று (ஹஜ்ஜுக்குரிய) தவாஃப் செய்ய வேண்டும். 54. இந்தத் தவாஃபின் போது முதல் மூன்று சுற்றுக்கள் சற்று வேகமாக ஓடுவதும், வலது புஜத்தைத் திறந்த நிலையில் ஆடை அணிவதும் இல்லை. 55. ஏழாவது சுற்று முடிந்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். 56. பிறகு ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்ய வேண்டும். கிரான் முறையில் ஹஜ் செய்வோருக்கு ஏற்கனவே ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை. 57. இந்தத் தவாஃப் முடித்தவுடன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. (இது இரண்டாவது விடுதலை எனப்படுகின்றது.) குறிப்பு: கல்லெறிதல், குர்பானி கொடுத்தல், முடி களைதல் ஆகியவை முடிந்ததும் முதல் விடுதலை என்று பார்த்தோம். இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் அன்றைய தினம் (பத்தாம் நாள்) சூரியன் மறைவதற்கு முன்பு தவாஃபுல் இஃபாளா செய்தாக வேண்டும். முதல் விடுதலை பெற்றவர் தவாஃபுல் இஃபாளா செய்யாமல் சூரியன் மறைந்து விட்டால் அவருக்கு அந்தச் சலுகை ரத்தாகி விடும். அதாவது இஹ்ராமுடைய நிலைக்கு வந்து விடுவார். அதனால் அவர் தையல் ஆடை அணியவோ, நறுமணம் பூசவோ கூடாது. இந்த நிலையை அடைந்தவர் தவாஃபுல் இஃபாளா முடித்த பின்னர் தான் தையல் ஆடை அணிதல், நறுமணம் பூசுதல் போன்ற சலுகையைப் பெற முடியும். 58. மக்காவில் லுஹர் தொழ வேண்டும். திரும்ப வந்து மினாவிலும் லுஹர் தொழுது கொள்ளலாம். 59. ஜம்ஜம் நீருக்கு அருகில் வந்து அதைப் பருக வேண்டும். 60. 

பத்தாம் நாளன்று 

1. கல்லெறிதல், 2. பலியிடுதல், 3. தலைமுடி களைதல், 4. தவாஃபுல் இஃபாளா ஆகிய வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். அதன்படி நாமும் செய்ய வேண்டும். எனினும் இந்த வணக்கங்களை முன், பின் மாற்றிச் செய்து விட்டால் குற்றமில்லை. மினாவில் தங்குதல் 61. பிறகு மினாவுக்கு வந்து 11, 12, 13 ஆகிய நாட்களில் தங்க வேண்டும். 62. இந்த நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களிலும் 7 கற்களை எறிய வேண்டும். 63. மஸ்ஜிதுல் கைப் அருகில் உள்ள முதல் ஜம்ராவிலிருந்து கல்லெறியத் துவங்க வேண்டும். அதில் எறிந்து முடித்தவுடன் சற்று வலது பக்கமாகச் சென்று, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். 64. இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அதுபோன்று கல்லெறிய வேண்டும். பிறகு இடது பக்கமாகச் சென்று கைகளை உயர்த்தி, கிப்லாவை நோக்கி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். 65. பிறகு மூன்றாவது ஜம்ராவுக்கு வந்து, மக்கா நமது இடது புறமாகவும் மினா நமது வலது புறமாகவும் அமையுமாறு நின்று கல்லெறிய வேண்டும். இங்கு கல்லெறிந்த பிறகு அங்கு நிற்கக் கூடாது. 66. பிறை 12, 13 ஆகிய நாட்களிலும் இவ்வாறே கல்லெறிய வேண்டும். 67. பிறை 13 அன்று தங்காமல் 12வது நாளிலேயே ஊர் திரும்புவதற்கு அனுமதி உண்டு. 13ஆம் நாள் தங்குவதாக இருந்தாலும் தங்கலாம். அல்லாஹ் இந்தச் சலுகையை அளிக்கின்றான். எனினும் 13 அன்று தங்கிச் செல்வது நபிவழியாகும். 68. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவில் தங்கிக் கொண்டு மினாவில் வந்து கல்லெறியலாம். 69. தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறிய வேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம். 70. 12ஆம் நாள் அல்லது 13ஆம் நாள் கல்லெறியும் வணக்கம் முடிந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் அதிகமதிகம் தொழ வேண்டும். 71. அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும். விடை பெறும் தவாஃப் 72. தேவைகள் முடிந்து பயணத்தை உறுதி செய்ததும் கஅபாவிற்குச் சென்று தவாஃபுல் விதா (விடை பெறும் தவாஃப்) செய்ய வேண்டும். 73. மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதா செய்யாமல் புறப்பட்டுக் கொள்ளலாம். 74. ஜம்ஜம் நீரை எடுத்துச் செல்வது விரும்பத்தக்கதாகும். ஹஜ் ஆதாரங்கள் 1, 2. துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) "தல்பியா' கூறினர். (நூல்: முஸ்லிம் 2137) 3. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். "ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687) 4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள். (நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656) 5 & 7. ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) "நமிரா' எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 6. நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்?'' எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை'' என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி 970) 8. சூரியன் உச்சி சாய்ந்ததும் "கஸ்வா' எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் ("உரனா') பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 9-11, பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137) 12. "அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்'' என்பது நபி மொழி. (நூல்: முஸ்லிம் 2138) 13. "ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814) 14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த ("ஜபலுர் ரஹ்மத்' மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது "கஸ்வா' எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். 15. நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961) 16. அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, "இவர்கள் எதை விரும்புகிறார்கள்?'' என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402) 17. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள். (நூல்: புகாரி 1658) 18-22. சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். "கஸ்வா' எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, "மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)'' என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு "தொழுகை அறிவிப்பு'ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. (நூல்: முஸ்லிம் 2137) 
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 1230) 
23. தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். (நூல்: புகாரி 1678, 1677, 1856) 24, 25. பிறகு "கஸ்வா' ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு ("குஸஹ்' மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், "அவன் தனித்தவன்' என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும் வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
26. முஸ்தலிபா முழுவதும் தங்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138) 
27. பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 28, 29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடையிலுள்ள) "பத்னு முஹஸ்ஸிர்' எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் "ஜம்ரத்துல் அகபா' செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
30. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், "ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (நூல்: முஸ்லிம் 2248) 32. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறுகற்களை எறிந்தார்கள். பிறகு "இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748) 
33, 34. "ஜம்ரத்துல் அகபா'விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2137, 2248) 35. "ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறியும் வரை நபி (ஸல்) அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687) நபி (ஸல்) அவர்கள் "ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள். (நூல்: இப்னு குஸைமா) 
36, 37. நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, "ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ 817) 38. அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், "மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் "இல்லை' என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு "மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் "ஆம்' என்றேன். அப்போது அவர்கள், "புறப்படுங்கள்'' என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். "இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே'' என்று கேட்டேன். அதற்கவர்கள் "நபி (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்'' என விடையளித்தார்கள். (நூல்: புகாரி 1679) 
39, 40. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!'' என்று கேட்டதும். அவர்கள் "குற்றமில்லை!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1723) 
41. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 42. மினா முழுவதுமே அறுக்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138) 43. பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)  44. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
45. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம். (நூல்: முஸ்லிம் 2128, 2323) 
46. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பலியிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:196) 
47. குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை! (நூல்: புகாரி 1998) 
48. "இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் "முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்'' (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். "இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக'' என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் "முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்'' என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1727) 
49. நபி (ஸல்) அவர்கள் நாவிதரை நோக்கித் தமது வலது பக்கத்தையும், பிறகு தமது இடது பக்கத்தையும் சுட்டிக்காட்டி, "முடியை எடு'' என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம் 2298) 
50. "தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 1694) 
51. "நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708) 
52. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது "அள்பா' எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன். (நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669) 
53. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, ("தவாஃபுல் இஃபாளா' செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
54. நபி (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை. (நூல்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051) "நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708) குறிப்பு: இந்த ஹதீஸின் அடிப்படையில் தையல் ஆடை அணிந்து கொள்ளலாம் என்பதால் வலது புஜம் திறந்த நிலையில் தவாஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை. 
55. நபி (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (நூல்: புகாரி: 396) 
56. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். இன்னும் அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது'' என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவைத் தவாஃபும், செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், "உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவை விட்டுவிடு!'' என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். "இது உனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒருமுறை கஅபாவைச் சுற்றி தவாஃபும் (ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸயீயும்) செய்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒருமுறை (கஅபாவை) மட்டுமே தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1556) 
57. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்தியஉறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், "அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், "அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!' என்றதும் "அப்படியாயின் புறப்படுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1733) 
58. நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று "தவாஃப் அல் இஃபாளா' செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2307) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2137) குறிப்பு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள். 
59. மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் "ஸம்ஸம்' கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள். "ஸம்ஸம்' கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்'' என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 
60. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்'' என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை'' என்றார்கள். இன்னொருவர் வந்து "நான் கல்லெறிவதற்கு முன்பே கஅபாவைத் தவாஃப் செய்து விட்டேன்'' என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை'' என்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் "செய்து கொள்! தவறேதும் இல்லை'' என்றார்கள்.  (நூல்: புகாரி 124, 1738, 83, 1736) 
61. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745) 
62-64, இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஊலா' எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு "ஜம்ரதுல் உஸ்தா'வில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு "பதனுல் வாதி' என்ற இடத்திலிருந்து "ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்'' எனவும் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1751, 1753) 
65. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். பிறகு "இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748) 
66. அறுத்துப் பலியிடுகின்ற பத்தாம் நாளன்று லுஹா நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிந்தார்கள். தஷ்ரீக்குடைய மற்ற (11, 12, 13) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பின் கல்லெறிந்தார்கள். (நூல்: அஹ்மத் 14753) 67. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2:203) 68. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745) 
69. மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878) 
70. "எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது "மஸ்ஜிதுல் ஹராம்' தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்.'' என்பது நபி மொழி. (நூல்: புகாரி 1190) "(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996) 
71. "அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875) 
72. மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2350, 2351) 
73. "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது). (நூல்: புகாரி 1755) 
74. ஆயிஷா (ரலி) அவர்கள் "ஸம்ஸம்' நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ 886)

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/egathuvam/2012-ega/ega_oct_2012/

Copyright © www.onlinepj.com