புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


samedi 26 novembre 2011

நாம் எதற்கு TNTJவில் இணைந்திருக்க வேண்டும் ?

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் நாம் இணைந்திருப்பது எதற்க்காக ?

  • தலைப்பு : தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் நாம் இணைந்திருப்பது எதற்க்காக ?
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

mercredi 23 novembre 2011

யூதர்கள் - பாலஸ்தீன வரலாறு

ஹீப்ரு மொழி
யூதர்களின் வேதமான தோரா, மிகச் சில மாறுபாடுகளுடன் அப்படியே கிறிஸ்தவர்களின் பைபிளிலும் பழைய ஏற்பாடாக வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இக்கதைகள் வருகின்றன. மூன்று மதங்களுமே ஆதாம்_ஏவாள்தான் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மானுடப்பிறவிகள் என்பதிலிருந்து ஆரம்பித்து உலகம் தோன்றிய கதையென்று ஒரே விதமான அபிப்பிராயத்தைத்தான் கொண்டுள்ளன. மூன்று மதத்தின் புனித நூல்களிலும் ஆபிரஹாம், மெசபடோமியாவிலிருந்து (யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான இன்றைய ஈராக்) புறப்பட்டு, கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீன நிலப்பகுதிக்குப் போய் வசிக்கத் தொடங்கியதை ஒப்புக்கொள்கின்றன. அவரது சந்ததி தழைக்கத் தொடங்கியது அங்கேதான். முதலில் சாராவும் பிறகு ஆபிரஹாமும் இறந்தபோது புதைக்கப்பட்டது அல்கே ஹெப்ரான் (Hebran) என்னும் இடத்திலுள்ள மக்பெலா (Machbelah) என்ற குகையில்தான். (இந்த இடம் இப்போது ஜோர்டனில் உள்ளது.) இதே குகையில்தான் ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும்கூட அடக்கம் செய்யப்பட்டதாக நம்பிக்கை. இந்த நம்பிக்கையும் மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவானது. மக்பெலா குகை அவர்களுக்கு ஒரு புனிதத்தலம்.


யூதர்கள் சொல்லும் நாலாயிரம் வருடம் என்பதற்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்களைத் திரட்டுவது சிரமம். இயேசு கிறிஸ்துவின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வைத்துக்கொண்டு கணக்கிட்டால், பைபிளின் பழைய ஏற்பாடு சொல்லும் காலம்தான் இது. வழிவழியாக ஏற்கப்பட்ட நம்பிக்கைதானே தவிர அறுதியிட்டுச் சொல்லமுடியாத காலக்கணக்கு. அப்படிப் பார்த்தாலும் யூதமதம் காலத்தால் முற்பட்டதுதான். நோவா, ஆபிரஹாம், மோசஸ் தொடங்கி ‘தீர்க்கதரிசி’களாக பைபிள் வருணிக்கும் வம்சத்தின் கடைசி யூத தீர்க்கதரிசி என்றால் அது இயேசுநாதர்தான். இயேசுநாதருக்கு முன்பு தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியே மதம் என்று ஒன்றை ஸ்தாபிக்கவில்லை. யூதமதம் ஒன்றுதான் மத்தியக்கிழக்கில் வலுவான மதமாக இருந்திருக்கிறது. வேறு சில மேற்கத்திய _ குறிப்பாக கிரேக்க, ரோமானிய இனத்தவரின் ஆதி மதங்களும் வழிபாட்டு முறைகளும், ஆங்காங்கே பரவியிருந்தாலும், அரேபிய மண்ணிற்கே உரிய சிறுதெய்வ வழிபாடுகள் இருக்கவே செய்தாலும், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, ‘ஒரே கடவுள்’ என்னும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட (யூதக் கடவுளின் பெயர் ஜெஹோவா.) உருவ வழிபாடில்லா மதம், யூத மதம்தான்.

யூதர்கள் தமக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருந்தார்கள். எபிரேயு என்று பைபிள் சொல்லும் ஹீப்ரு மொழி. புராதனமான செமிட்டிக் மொழிகளுள் ஒன்று இது. தோரா எழுதப்பட்டது இம்மொழியில்தான். கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஹீப்ரு, பொனிஷியன் (Phoenician) போன்ற சில செமிட்டிக் மொழிகளுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்பட்டது. ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாலஸ்தீனிய யூதர்கள் பேசிய ஹீப்ரு, தன் முகத்தைப் பெருமளவு மாற்றிக்கொண்டது. ரொம்ப கவனித்துப் பார்த்தால் மட்டுமே அது ஹீப்ரு என்று புரியும். அராபிக் தாக்கம் மிகுந்திருந்தது அப்போது. பாலஸ்தீனுக்கு வெளியே _ அரபு மண்ணின் பிற பகுதிகளில் அப்போது வாழ்ந்த யூதர்கள், அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையே உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள ஹீப்ருவின் வரிவடிவம் கி.மு. முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி அது. (அரபிக் மாதிரி.)

அப்போதெல்லாம் யூதர்களின் மொழி என்பதாக ஹீப்ரு இருந்ததே தவிர, அது ஒரு தலையாய அடையாளமாகக் கருதப்படவில்லை. மதநூல்கள் மட்டுமே ஹீப்ருவில் எழுதப்படும் என்றும், அத்தகைய புனிதமான பிரதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க மொழி அது என்பதாகவும் ஒரு கருத்து இருந்தது. இதனாலேயே காலப்போக்கில் ஹீப்ரு இறக்கத் தொடங்கியது.

மிகச் சமீபகாலத்தில் _ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில்தான் யூதர்கள் தம் மொழியை ஒரு புதைபொருள் போல மீட்டெடுத்தார்கள்.

யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.

இன்றைக்கு இஸ்ரேலில் பேசப்படும் மொழி ஹீப்ரு. எழுதுவது போலவே பேசப்படும் மொழி அது. அதாவது, பேச்சு வழக்கு என்றுகூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை. அது ஒரு அடையாளம். மிகப் பெரிய அடையாளம். ஜெருசலேம் நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான சுவரைப் போல யூதர்கள் தம் அடையாளச் சுவராகத் தம் மொழியைக் கொண்டிருக்கிறார்கள். மொழி மட்டுமல்ல. பண்பாடு, கலாசாரம், வழிபாடு, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த முறையையே இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் அவர்கள்.

இன்று தொழில்நுட்பத்திலும் விவசாயத்திலும் உலகின் அதிநவீன சூத்திரதாரிகளாக இருக்கும் அதே யூதர்கள்தான், தமது அடையாள விஷயங்களில் மிக கவனமாகத் தொன்மம் பேணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலிய யூதர்களின் யுத்தத்துக்கு வேண்டுமானால் ஐம்பத்தாறு வயது இருக்கலாம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் யூதர்களின் மீது நிகழ்த்திய யுத்தத்துக்கு வயது பல நூறு ஆண்டுகள்.

ஈஸாக்கின் வழித்தோன்றல்கள், புராண காலத்தில் பட்ட கஷ்டங்களுக்குக் கதைகள்தான் ஆதாரம். ஆனால் சரித்திர காலம் தொடங்கியதிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்களுக்கு இன்றைக்கும் ஏராளமான சாட்சியங்கள் உண்டு.
தொடரும் இன்ஷா அல்லாஹ்.

mardi 15 novembre 2011

எனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா ?

கேள்வி : அச்சலம் அலைக்கும், எனது கேள்வி நான் வழக்கை முழுவதும் கஷ்ட படுபவனாக உள்ளேன்,என் இரு மத குழைந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தேன் பிறகு இரண்டு வருடத்திற்கு பிறகு என் தந்தைக்கு ஹார்ட் பிளாக் அறுவை சிகிச்சை செய்தேன் இதற்கு நடுவில் என் உடல்நிலை ரொம்ப மோச மாகிவிட்டது பிறகு தெரியவந்தது எனக்கு கிட்னியில் கல் உள்ளது ,இந்த நோய் அறியாமலேயே நான் ரொம்ப செலவு செய்தà  விட்டேன் ,இப்பொழுது மருந்து வாங்கி கொண்டுயிருக்கிறேன்,என் தொழிலும் சரியில்லை ,அப்பா பல வர்சமாக வெளிநாட்டில் உள்ளார் ,அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்த பின்பும் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் ,இன்று அவரால் முடியவில்லை, எனக்கும் அவரை அனுப்ப விருப்பம் இல்லை ,என் குடும்பமோ ,பெரியது நான் சம்பாரிப்பது பத்தாது ,என் குடும்பத்தை காப்பற்ற நான் மிகவும் வெயிலில் சுத்தி திர ிந்து கஷ்ட படுகிறேன் ஒண்ணுமே சம்பரிப்பு காணோம் ,அதிகமாக வெய்யிலில் சுத்தினாலும் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்னும் நோய் அதிகரிக்குது,ஏன் வழக்கை முழுவதும் கஷ்டங்களே உள்ளன,வறுமை தலைதுக்குது செலவுகளோ அதிகம் ,பெரி குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு மத விட்டின் செலவு மிகவும் பாரமாக உள்ளது ,ஒரு சின்ன குடும்பத்தின் செலவோ 3 ,000 ருபாய் ,அனால் நான் பிறந்து வளந்த குடு ம்ப மாத செலவு 10 ,000 ருபாய் இதற்காக நான் மிகவும் பாடுபடுகிறேன் ,என்னால் முடியவில்லை,ஏன் கேள்வி எனக்கு ஏன் அல்லாஹ் துன்பத்துக்கு மேல் துன்பம் தருகிறான் பல வருசங்கள் ஓடி விட்டன என் கஷ்டங்கள் இன்னும் போகவில்லை இதற்க்கு இஸ்லாமிக் முறையில் தீர்வு என்ன ? நான் அல்லாஹ் வை தவிர யாரையும் வணங்குவதில்லை ,நான் ஒரு தவ்ஹீத் வாதி,எனக்கு இஸ்லாமிக் முறையில் பதில் சொல்லுங்கள்

Mohd rafik shaik

பதில் : உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலக மக்களின் விடிவுக்கு இறைவன் மூலமாக நமக்கு திருமறைக் குர்ஆன் என்ற ஒரு பொக்கிஷத்தை பெற்றுத் தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆன் உங்கள் பிரச்சினைக்கு மிகத் தெளிவான பதிலைத் தருகிறது.

பிரச்சினைகள் நமது ஈமானை சோதிப்பதற்கே!

இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (2-157)
மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!

செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம் செலவு செய்கிறான் என்று இறைவன் சோதிப்பான் இல்லாதவன் செல்வம் இல்லாத போது இறைவன் விஷயத்தில் எப்படி இருப்பான் என்று இறைவன் சோதிப்பான்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குறிய சோதனை செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் கஃப் பின் இயாழ் (ரழி) நூல் திர்மிதி
சோதனையான ஒரு விஷயத்தில் இறைவனிடமே நமது கோரிக்கையை நாம் ஒப்படைக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் . என் அடியானின் இரு கண்களை நான் (போக்கிவிடுவது) கொண்டு அவனைச் சோதித்து அவன் அப்போது பொருமையாக இருப்பானானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாக சுவர்க்கத்தை வழங்குவேன் என நபியவர்கள் கூறியதை நான் செவிமடுத்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – புகாரி 5653)
இப்படி பல சந்தர்ப்பங்களில் சோதனைகளை பொருத்துக் கொள்வர்களுக்கு இறைவன் தனது அருளைப் பொழிவதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கண்டிப்பாக பொருமையாக இருப்பதுதான் மிகவும் சிறந்த பண்பாகும்.
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10) 

அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான் (2-153)
ஆக அன்பின் சகோதரர் அவர்களே உங்கள் பிரச்சினையை இறைவனிடம் கூறி மன்றாடுங்கள் இறைவன் கண்டிப்பாக அவற்றை நீக்குவான்.

குறிப்புஉங்கள் கேள்வி பற்றிய மேலதிக விபரத்திற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் ரமழான் 30 நாட்களும் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையை http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/p_2/ என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

dimanche 13 novembre 2011

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)

நபிவழி தொழுகை
நபி வழி தொழுகை வீடியோ
  • தொழுகை மற்றும் உளு செய்யும் முறை
  • செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ்
  • வீடியோ - TNTJ

samedi 12 novembre 2011

அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் - பாலஸ்தீன வரலாறு

உலக இஸ்லாமிய வரலாற்றில் பாலஸ்தீன வரலாறு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வரலாற்றை தெரிந்திருப்பது அவசியமாகும் ஏனெனில் நம்முடைய மூன்று புனித இடங்களில் ஒன்றான ஜெருசலம்,பைத் அல் முகத்திஸ் வரலாறும் இந்த வரலாற்றுடன் ஒன்றியதாக உள்ளது.இந்த வரலாற்றை பற்றிய உண்மையான நிலவரத்தை எந்த பத்திரிகையும் மீடியாவும் நமக்கு நடுநிலையோடு தெரிவிக்கவில்லை, தெரிவிக்கப் போவதுமில்லை(அல்லாஹ் நாடினாலே தவிர!).

குமுதம் வார இதழில் "நிலமெல்லாம் ரத்தம்" என்ற தொடர் கட்டுரை, பா.ராகவன் என்றவரால் நடுநிலையோடு தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.இந்த தொடரின் முக்கியத்துவத்தை கருதி நம் இணையதளத்திலும் தொடராக இந்த கட்டுரையை வெளியிடிவோம் இன்ஷா அல்லாஹ்.

அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை.
 யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள்.எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள். இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத் துடைத்துக்கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?

அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.
அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (ỆAhmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?

தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்.

jeudi 10 novembre 2011

ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா?

கேள்வி : zaka oru muraithan koduka vanduma?
தமிழாக்கம் : ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா?
shihana rizan - srilanka

பதில் : இஸ்லாம் விதித்த கடமைகளில் ஸக்காத்தும் ஒன்றாகும்.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 8
ஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துப்பட ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.

ஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்டால் அதற்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்கத் தேவையில்லை மாறாக அதன் மூலம் வரக்கூடிய மேலதிக வருமானத்திற்கு மாத்திரம் தான் ஸக்காத் கொடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவரிடம் 11 பவுன் தங்கம் அல்லது அதற்கு சரி சமனான பணம் இருந்தால் அவருக்கு ஸக்காத் கடமையாகிவிடும். அவர் 11 பவுனுக்குறிய ஸக்காத்தைக் கொடுக்க வேண்டும்.

11 பவுனுக்குறிய ஸக்காத்தை அவர் கொடுத்ததின் பின் அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் மேலதிக வருமானத்திற்குத் தான் அவர் ஸக்காத் கொடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே கொடுத்த 11 பவுனுக்கும் திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டியதில்லை.

ஆக ஸக்காத் என்பது ஆயுலில் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்று தாங்கள் விளங்கியிருந்தால் அது தவறானதாகும் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியானதாகும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா?

கேள்விஅஸ்ஸலாமு அழைக்கும் !!!ஒழு இல்லாமல் குரான் ஐ தொடலாமா? மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு நிற்காத போது மூன்று நாட்கள் கழித்து குரான் ஐ தொடுவதும் ஓதுவதும் கூடுமா ? ஹதீஸ் ஆதாரங்களோடு கூறவும் .
Mubashareena S. – India

பதில்உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும், உழு இல்லாமலும், மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம்.

தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள்.

முதல் வாதமும், பதிலும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள்.

(முஸ்னத் பஸ்ஸார் – 279)
முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ, அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்)

பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்)

இரண்டாவது வாதமும், பதிலும்.

அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின் 79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் - 56 : 79)
இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக் கிடைக்கிறது.

மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.

முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள்.

ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு இங்கு தேவை ஏற்படும்.

ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம்.
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல்குர்ஆன் - 56 : 77. 79)
56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது.

இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன.
அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் - 80 : 11-16)
இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் - 26 : 210 212)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம்.

தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள்.

தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும், அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும், ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

காபிர்களுக்கே நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7, 2941
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆகவே திருமறைக் குர்ஆனை உழு இல்லாதவர்களும், மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

mercredi 2 novembre 2011

இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (VIDEO)

இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் அரபு நாட்டில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் எனவும், இந்நாட்டில் முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான் எனவும் இலங்கையின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
  • உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா?
  • இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன?
  • இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?
  • இயக்கர் மற்றும் நாகர் என்ற பழங்குடியினர் யார்?
  • விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது உண்மையா?
  • இலங்கை முஸ்லீம்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் என்ன சொல்கிறது?
  • அரபிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் என்னென்ன?
இது போன்ற பல கேள்விகளுக்கான விடையாக “இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா?” என்ற தலைப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட உரையை இங்கு வெளியிடுகிறோம்.

mardi 1 novembre 2011

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு
வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும்
  • அரஃபா நோன்பு
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
குறிப்பு : இந்த வீடியோ பழைய வீடியோ என்பதால் ,இதில் குறிப்பிடும் தேதிகளையும் கிழமைகளையும் இந்த வருட அரஃபா நோன்போடு சம்பந்தப் படுத்திக் கொள்ளவேண்டாம்.

இமாம் பாத்திஹா சூராவிற்கிடையில் நேரம் தரலாமா?

கேள்வி : imaam soorathul paatiha ooti matraya soora todankkvatatkitail sirya naaram taruvathu nabi valiya?
MTM farhan - srilanka

பதில்இமாமுடன் தொழும் தொழுகைகளில் இமாம் சூரா பாத்திஹா ஓதியதின் பின்னர் துணை சூரா ஓதுவதற்கு முன்பு பின்பற்றித் தொழுபவர்கள் ஓதுவதற்கு நேரம் விடுவேண்டும் என்று ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்! (அல்குர்ஆன்7:204)
நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் 'குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!' என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162
'இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 612
மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து இமாம் கிராஅத் ஓதும் தொழுகைகளில் நாம் எதையும் ஓதாமல் அமைதியாக இமாம் ஓதுவதை செவிமடுக்க வேண்டும். இமாம் அமைதியாக இருக்கும் ரக்அத்துக்களில் சூரா பாத்திஹாவையும் விரும்பினால் துணை சூராவையும் ஓதிக்கொள்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளது.

ஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா?

கேள்வி : Assalamalaikum
'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார் bukhari:224 appadi endral aangal nindru siruneer kalikkalama.

zzz zzz - India

பதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி 224
மேற்கண்ட ஹதீஸ் குப்பைகள் போடப்படும் குப்பை மேடொன்றில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என்று கூறுகிறது. சிறுநீர் கழிக்கும் போது அசுத்தம் படுமென்றிருந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்களாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமானதாகும். உற்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் நோக்கமே அசுத்தம் நம்மீது படக்கூடாது என்பதுதான் அப்படியிருக்கும் போது உற்கார்ந்து சிறுநீர் கழித்தால் அசுத்தம் படுமென்றிருந்தால் அப்போது அண்களாக இருந்தாலும் பொண்களான இருந்தாலும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இக்கட்டான நிலைமைகளுக்குத் தான் இஸ்லாம் இந்தத் தீர்பை சொல்கிறது. மற்ற நேரங்களில் கண்டிப்பாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதுதான் நபி வழியாகும். இதனை கீழ் காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24604